இந்தியாவில் 2019 பிப்ரவரி 14ஆம் தேதி புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்கியதில் 40 வீரர்கள் மாண்டனர். இதற்குப் பதிலடியாக 2019 பிப்ரவரி 26ஆம் தேதி இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானில் புகுந்து பாலகோடு என்ற பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தன.
அந்த நடவடிக்கையின் போது இந்திய விமானப்படை போர் விமானியான அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தானிடம் பிடிபட்டார்.
அவரை 2019 மார்ச் 1ஆம் தேதி இந்திய ராணுவத்திடம் பாகிஸ்தான் அதிகாரிகள் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
இந்நிலையில், அபிநந்தனை விடுவிக்கவில்லை என்றால் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக தாக்கி இருக்கும். அதை உணர்ந்து கொண்டுதான் அபிநந்தனை உடனடியாக பாகிஸ்தான் விடுவித்துவிட்டதாக அந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சித் தலைவர் அயாஸ் சாதிக் குறிப்பிட்டார்.
“அபிநந்தன் பிடிபட்டதும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி தலைமையில் அவரசக் கூட்டம் நடந்தது.
“அந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த குரேஷி, 2019 பிப்ரவரி 27ஆம் தேதி இரவு 9 மணிக்கு பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தப்போவதாக நாடாளுமன்றத் தலைவர்களிடம் தெரிவித்தார்.
“இப்படி அவர் கூறியதைக் கேட்ட பாகிஸ்தான் ராணுவத் தளபதி பாஜ்வாவின் கால்கள் நடுங்கின. அவருக்கு வியர்வை கொட்டியது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் இம்ரான் கான் மறுத்துவிட்டார்.
“அபிநந்தனை போகவிடுங்கள் என்று வெளியுறவு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
“அதனைத் தொடர்ந்துதான் அபிநந்தன் இந்தியாவிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்,” என்று பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தது பாகிஸ்தானில் பிரச்சினையை கிளப்பிவிட்டு இருப்பதாக ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.