புதுடெல்லி: இந்தியாவில் கொவிட்-19 பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்து நேற்றுடன் 220 நாட்கள் ஓடிவிட்டன.
அந்தக் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்கள், நேற்றுக் காலை நிலவரப்படி மொத்தம் 8,040,203 பேர் என்று மத்திய அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கொவிட்-19 காரணமாக 120,527 பேர் மரணம் அடைந்துள்ளனர். 7,315,989 பேர் முற்றிலும் குணமடைந்துவிட்டனர். நேற்றைய நிலவரப்படி 603,587 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
கிருமி தொற்றியவர்களில் இப்போது சிகிச்சை பெற்று வருவோரின் அளவு 7.5%.
மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் அதிக பாதிப்புகள் இன்னமும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளானவர்கள் குணமடைந்து வரும் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று அந்த விகிதம் 90.99 விழுக்காடாக இருந்தது.
கடந்த சில நாட்களாகவே புதிதாக கிருமி தொற்றுவோரின் எண்ணிக்கை நிலையாகக் குறைந்து வருகிறது.
மரண விகிதம் 1.49 விழுக்காடாக இருக்கிறது.
புதன்கிழமையன்று புதிதாக 49,881 பேரை கிருமி தொற்றியது என்றும் அன்று 56,480 பேர் குணமடைந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

