தனது எல்லையை விரிவுபடுத்த விரும்பும் சீனாவின் முயற்சிகளைத் தடுப்பதில் இந்தியா தயங்கக்கூடாது என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அவ்வாறு தயங்குவது சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளைப் பாதிக்கும் என அண்மையில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தபோது, அமெரிக்க அமைச்சர் மைக் பொம்பியோ வலியுறுத்தியதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த செவ்வாய்க்கிழமை புதுடெல்லியில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது லடாக் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயற்சிக்கும் சீன ராணுவத்தின் நடவடிக்கைக்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் பதிலடி நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முழுமையான ஆதரவு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் முதல் நீடித்துவரும் இருதரப்பு எல்லைப் பிரச்சினை காரணமாக அமெரிக்கா, இந்தியா இடையேயான இணக்கம் அதிகரித்து வருவதாக உலக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இந்தியப் பயணத்தின்போது சீனாவுக்கு எதிரான கொள்கையை மைக் பொம்பியோ மிக அழுத்தமாக வெளிப்படுத்தி உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய சூழலில் அமெரிக்காவின் உதவியைப் பெறும் இந்தியா, சீனாவுடனான விவகாரங்களில் தயங்கக்கூடாது என அந்நாடு வலியுறுத்தி உள்ளது.