புதுடெல்லி: புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதாக அந்நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவட் சௌத்ரி பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இது அந்நாட்டுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா நீண்ட நாட்களாக கூறிவந்ததை பாகிஸ்தான் இப்போது ஒப்புக்கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தின் காரணமாகவே தங்களிடம் சிக்கிய இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை பாகிஸ்தான் அரசு முன்பு விடுவித்ததாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி எம்பி அயாஸ் சாதிக் அந்நாட்டு நாடளுமன்றத்தில் பேசியபோது குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்தியாவுக்குள் நுழைந்து பாகிஸ்தான் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி இருப்பதாகக் கூறியுள்ளார் அமைச்சர் ஃபவட் சௌத்ரி.
புல்வாமா தாக்குதலைச் சுட்டிக்காட்டியே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் பலியாகினர்.
“இந்தியாவுக்குள் நுழைந்து அதன் சொந்த மண்ணிலேயே வெற்றி கொண்டுள்ளோம். இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியிருப்பது பிரதமர் இம்ரான்கான் தலைமையில் இந்த நாடு (பாகிஸ்தான்) கண்டுள்ள வெற்றி. புல்மாவாவில் நமக்குக் கிடைத்த இந்த வெற்றியானது இம்ரான்கான் தலைமைக்குக் கிடைத்த வெற்றி,” என்றார் அமைச்சர் ஃபவட் சௌத்ரி.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலேயே அவர் இவ்வாறு வெளிப்படையாகப் பேசியிருப்பதால் உலக அரங்கில் அந்நாட்டுக்குச் சங்கடம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் ஒப்புதல் இந்தியாவுக்கு நன்மை பயக்கும் என மத்திய சாலை, மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சரும் இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதியுமான வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
“பாகிஸ்தானின் வெளிப்படையான அறிவிப்பை இந்திய அரசு நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் என நம்புகிறேன். பாகிஸ்தானின் இந்தச் செயல்பாடு குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்ல முடியும். மேலும், பாகிஸ்தானை கறுப்புப் பட்டியலில் சேர்க்க இந்தியா வலியுறுத்த வேண்டும்,” எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இதற்கிடையே, இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் தவறிவிட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா சாடியுள்ளார்.
“பாகிஸ்தான் குறித்த உண்மை ஒட்டுமொத்த உலகத்துக்கும் தெரியும். அந்நாடு தீவிரவாதத்துக்கு ஆதரவாக உள்ளது. எவ்வளவு முறை மறுத்தாலும் இந்த உண்மையை மறைக்க இயலாது.
“தீவிரவாதத்துடனான தங்களது தொடர்பு குறித்து அந்நாட்டுத் தலைவர்களே பலமுறை பேசியுள்ளனர். ஐ.நா. மன்றத்தால் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்துள்ளது. எனவே, தீவிரவாதத்தால் தாங்கள் பாதிக்கப்பட்டதாக சித்திரிக்க அந்நாடு முயற்சிக்கக்கூடாது,” என்று அனுராக் தெரிவித்துள்ளார்.