இந்தியாவின் குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ரசாயன சரக்கு கிடங்கில் நேர்ந்த வெடிப்புச் சம்பவத்தால் அதன் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் குறைந்தபட்சம் 12 பணியாளர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று (நவம்பர் 4) நிகழ்ந்த இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஐவர் பெண்கள். இந்தச் சம்பவத்தில் மேலும் 9 பேர் காயமடைந்தனர்.
அங்கு நிகழ்ந்த வெடிப்பில் கட்டடத்தின் சுவர்கள் தவிடுபொடியானதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அதே வளாகத்தில் செயல்பட்டு வந்த துணிகள் தொழிற்சாலை ஒன்றும் சேதமுற்றது.
ரசாயன தொழிற்சாலையின் ஒரு பகுதியில், தீ காரணமாக வெடிப்பு நிகழ்ந்ததாகவும் வெடிப்பால் கட்டடம் தரை மட்டமானதாகவும் அகமதாபத் தீயணைத்துறை உயர் அதிகாரி எம் எஃப் தஸ்தூர் கூறினார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் அனுதாபங்களைத் தெரிவித்த பிரதமர், அதிகாரிகள் அவர்களுக்கு உதவி வருவதாகவும் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.

