விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு செய்த நாளில் இருந்தே ஜீவனாம்சம் பெற முன்னாள் மனைவிக்கு உரிமை உண்டு என இந்தியாவில் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
விவாகரத்து தொடர்பான வழக்கு ஒன்று புதுடெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, ஆர்.சுபாஷ் ரெட்டி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரித்தது. விவாகரத்து செய்யப்படும் மனைவிக்கு ஜீவனாம்சம் அளிப்பது தொடர்பாக உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், “இந்து திருமண சட்டத்தில் கணவரிடம் இருந்து விவாகரத்தான மனைவிக்கு எப்போதில் இருந்து ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. எனினும், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு செய்த நாளில் இருந்தே ஜீவனாம்சம் பெற முன்னாள் மனைவிக்கு உரிமை உண்டு,” என்று குறிப்பிட்டுள்ளனர்.
“முறைப்படி ஜீவனாம்சம் பெறும்வரை இடைக்கால ஜீவனாம்சம் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை முடிவடைய சில ஆண்டுகள் ஆக வாய்ப்பு உள்ளது. எனவே, விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது முதலே ஜீவனாம்சம் பெற முதல் மனைவி உரிமை பெறுவதுதான் சரியாக இருக்கும். மேலும், நீதிமன்றத்தில் வாதாட விவாகரத்து பெறும் மனைவிக்கு நிதி நெருக்கடி ஒரு தடையாக இருக்கக் கூடாது,” என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.