இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் காற்று மாசடைவதால் அந்நகரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. பல ஆண்டுகளில் காணாத பனிப்புகையால் ஏற்படும் சுவாசப் பிரச்சினைகளை அந்நகர மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தைப் பனிப்புகை தருகிறது.
புதுடெல்லியில் ஒவ்வோர் ஆண்டும் குளிர்காலத்தில் காற்றின் தரம் பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் விவசாய நிலங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதாலும் காற்றின் தரம் பாதிக்கப்படுகிறது.
புதுடெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் காற்று மாசைக் குறைக்க இந்திய அரசு அவசரச் சட்டத்தை கொண்டு வந்தது. ஆனாலும், அங்கு காற்று மாசு இன்னமும் குறைந்தபாடில்லை. புதுடெல்லியில் கொரோனா கிருமிப் பரவல் அதிகரித்து வரும் சூழலில், குளிர்காலப் பருவத்தின் தொடக்கத்திலேயே காற்று மிகவும் மாசுபட்டுள்ளதால் புதுடெல்லி மக்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
கடும் பனிப்பொழிவு மற்றும் காற்று மாசடைவதால், புதுடெல்லி நகரமே புகைப்படலமாக காட்சி அளிக்கிறது. நேற்று காலை புதுடெல்லியின் ஆனந்த் விகார் பகுதியில் காற்று தரக்குறியீடு 484 புள்ளிகளாகவும் ஐ.டி.ஓ. பகுதியில் 472 புள்ளிகளாகவும் பதிவானது. அப்பகுதிகள் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்ததால், வாகனமோட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் பட்டாசு வெடிக்கத் தடை
இதற்கிடையே, தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுவதாகத் தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. காற்று மாசு உயர்வால் கொரோனா பாதிப்பு அதிகமாகும் எனவும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நாடு முழுவதும் காற்று மாசு அதிகமாக உள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிப்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் இம்மாதம் 30ஆம் தேதி வரை தடையை அமல்படுத்த வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியது. இந்த உத்தரவை அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பி தீவிரமாக செயல்படுத்த வேண்டும் எனவும் தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.

