திருமணத்துக்காகப் பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதற்கு எதிராக புதுச் சட்டம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படும் என ஐந்து மாநிலங்கள் தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும் பல முஸ்லிம் ஆடவர்கள் பெண்களைத் திட்டமிட்டு மதமாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
'லவ் ஜிகாத்' என்ற பெயரில் நடைபெறும் இத்தகைய மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்த உத்தரப்பிரதேச அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என அதன் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ளாவிட்டால் அவர்களின் இறுதி யாத்திரை விரைவில் தொடங்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக 'லவ் ஜிகாத்' எனப்படும் கட்டாய மதமாற்ற நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத். இந்நிலையில் பாஜக ஆளும் பிற மாநிலங்களின் முதல்வர்களும் லவ் ஜிகாத்தை எதிர்த்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தைப் பின்பற்றி சில நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக ஹரியானா முதல்வர் அறிவித்துள்ளார். இதையடுத்து லவ் ஜிகாத்தைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்தியப்பிரதேச முதல்வரும் தெரிவித்துள்ளார்.
திருமணத்துக்காக கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதைத் தடுக்க சட்டம் கொண்டுவரப்படும் என கர்நாடக சுற்றுலாத் துறை அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
ஹரியானாவில் கடந்த அக்டோபர் மாதம் 20 வயதே ஆன இளம் இந்துப்பெண் பட்டப் பகலில் பொது இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றது ஒரு முஸ்லிம் இளைஞர் என்பது தெரியவந்தது. இச்சம்பவத்துக்கு 'லவ் ஜிகாத்'தான் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கர்நாடகா, கேரளா, உத்தரப்பிரதேச காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின்போது அம்மாநிலங்களில் மதம் மாறி திருமணம் செய்துகொண்ட இந்துப் பெண்களை யாரும் மதமாற்றத்துக்குக் கட்டாயப்படுத்தவில்லை எனத் தெரியவந்ததாக முன்னர் அறிவித்தன. எனினும் சில மாநில அரசுகள் இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் மதம் மாறித் திருமணம் செய்து கொண்டவர்கள் குறித்த துல்லியமான எண்ணிக்கை தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த இளம் இந்துப்பெண் முஸ்லிம் மதத்துக்கு மாறி தன் காதலரை மணந்தார். இதற்கு 'லவ் ஜிகாத்'தான் காரணம் என்று பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டினர்.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் நடந்தது. அப்போது தாம் விருப்பப்பட்டு மதம் மாறியதாக இளம்பெண் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அத்திருமணம் செல்லும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கேரளாவில் நடந்த 11 மதமாற்றத் திருமணங்கள் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் தேசிய புலனாய்வு முகமைக்கு உத்தரவிட்டது. விசாரணைக்குப் பின்னர் எந்தப் பெண்ணும் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டதாகத் தெரியவில்லை என அந்த முகமை தெரிவித்தது.

