பிரதமர் மோடி வெளியிட்ட தமது தீபாவளிச் செய்தியில் உள்ளூர் வியாபாரிகள் தயாரித்த பொருட்களை வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதன் வாயிலாக பொருளியல் வளர்ச்சி அடையும் என்றார் அவர்.
உத்தரப்பிரதேசத்தில் தமது சொந்தத் தொகுதியான வாரணாசியில் திங்கட்கிழமையன்று ரூ. 614 கோடி மதிப்புள்ள மக்கள் நலத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, உள்ளூர் வியாபாரிகள் தயாரித்த பொருட்களை வாங்கி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
"உள்ளூர் வியாபாரிகளிடம்இருந்து வெறும் அகல் விளக்கு களை மட்டும் வாங்குவதோடு நிறுத்தி விடக்கூடாது.
"தீபாவளிக்காக நீங்கள் வாங்கும் அனைத்துப் பொருட்களையும் உள்ளூர் வியாபாரிகளிடம் இருந்து வாங்க வேண்டும். இது இந்தியப் பொருளியலை மேலும் வலுப்படுத்த பேருதவியாக இருக்கும். வாரணாசி மக்களுக்கு மட்டுமின்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்தக் கோரிக்கையை விடுக்கிறேன்," என்று திரு மோடி குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், "'ஸ்வமித்வா' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சொத்து அட்டை வழங்கப்படும் என்றார்.
"வங்கிக்கடன் பெறுவதற்கு மட்டுமின்றி விவசாய நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்க இந்தத் திட்டம் உதவும். வேளாண் சீர்திருத்தச் சட்டங்கள் வாயிலாக விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக சந்தையில் விற்பனை செய்ய வழி கிடைத்துள்ளது. இதனால் இடைத் தரகர்கள் நடைமுறை ஒழிக்கப்பட்டுள்ளது," என்றும் திரு மோடி தெரிவித்தார்.

