வரலாற்றில் முதன்முறையாக இந்தியா பொருளியல் மந்தநிலையை எதிர்கொண்டுள்ளது.
2020-21 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 23.9% வீழ்ச்சி கண்டது.
இந்நிலையில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாம் காலாண்டிலும் ஜிடிபி 8.6% சரிவைச் சந்தித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று இந்தியாவின் மத்திய வங்கி முதன்முறையாக வெளியிட்ட 'நவ்காஸ்ட்' ஆய்வறிக்கையில் தெரிவித்து உள்ளது.
மத்திய வங்கியின் துணை ஆளுநர் மைக்கல் பத்ரா உள்ளிட்ட பொருளியல் வல்லுநர்கள் குழு இந்தப் புள்ளிவிவரங்களை மதிப்பிட்டு இருக்கிறது.
"வரலாற்றில் முதன்முறையாக, இந்த நிதியாண்டின் முற்பாதியில் இந்தியா 'டெக்னிக்கல் ரிசெஷன்' எனப்படும் பொருளியல் மந்தநிலைக்குள் நுழைந்திருக்கிறது," எந்த அவ்விதழின் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்து இரு காலாண்டுகளாக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்மறை விகிதத்தில் இருந்தால் பொருளியல் மந்தநிலையை எட்டிவிட்டது எனப் பொருள்.
இம்மாதம் 27ஆம் தேதி அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களை இந்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விற்பனை குறைந்தபோதும் செலவினங்களைக் குறைத்ததால் இரண்டாவது நிதியாண்டில் நிறுவனங்கள் லாபம் ஈட்டின. இந்த ஏற்றம் நீடித்தால், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் இந்தியப் பொருளியல் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பலாம் எனச் சொல்லப்படுகிறது.
ஆயினும், "உலக நாடுகள் கொரோனா பாதிப்பின் இரண்டாவது தாக்குதலை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தியாவில் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகள் முதலீட்டுச் சந்தையைப் பாதிக்க நேரிடும். இதனால் இந்தியப் பொருளியல் வளர்ச்சியும் மீண்டும் சரிவைச் சந்திக்க வாய்ப்புள்ளது," என்று பொருளியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஆறு மாதங்களாக இந்தியப் பொருளியல் சரிவை எதிர்கொண்டதால் குடும்பங்களும் நிறுவனங்களும் பெரிய அளவிலான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. இது நிதித்துறையிலும் பாதிப்பை ஏற்படுத்திவிடலாம் என்றும் அவர்கள் எச்சரித்து இருக்கின்றனர்.
ஒட்டுமொத்தமாக, இந்த நிதி ஆண்டில் நாட்டின் பொருளியல் 9.5% சுருங்கக்கூடும் என்பது அவர்களின் கணிப்பு.
வலிமையை பலவீனமாக்கி விட்டதாக மோடி மீது சாடல்
இதனிடையே, இந்தியப் பொருளியல் இத்தகைய மோசமான நிலைக்குச் சென்றதற்குப் பிரதமர் நரேந்திர மோடியே காரணம் என காங்கிரஸ் எம்.பி.யும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடியிருக்கிறார்.
"வரலாற்றில் முதன்முறையாக இந்தியா பொருளியல் மந்தநிலைக்குள் நுழைந்திருக்கிறது. பிரதமர் மோடி தமது செயல்களாலும் கொள்கைகளாலும் இந்தியாவின் வலிமையை அதன் பலவீனமாக மாற்றிவிட்டார்," என்று ராகுல் காந்தி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

