பெங்களூரு: உலகின் ஆகப்பெரிய தடுப்பூசி நிறுவனமான 'சீரம் இன்ஸ்டிடியுட் ஆஃப் இந்தியா', நாற்பது மில்லியன் 'ஆஸ்டிரா செனக்கா கொவிட்-19' தடுப்பூசிகளைத் தயாரித்து வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தத் தடுப்பூசி, நோவாக்ஸ் தடுப்பூசிக்குப் போட்டியாக விரைவில் களத்தில் இறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்டிரா செனக்கா, நோவாக்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே அங்கீகாரத்துக்காகக் காத்திருக்கின்றன.
இறுதிக்கட்ட சோதனை நடத்து வதற்காக 1,600 பங்கேற்பாளர்களை சேர்த்துள்ளதாக சீரம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்துடன் சேர்ந்து ஆஸ்டிரா செனக்கா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வருகிறது. இது, இந்தியாவில் மனிதர்களிடம் சோதிக்கப்படும் ஆக நவீன தடுப்பூசி என்றும் செரம் குறிப்பிட்டது. இந்திய மருத்துவ ஆய்வு மன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகு தடுப்பூசி பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும்.
ஆனால் நாற்பது மில்லியன் தடுப்பூசிகளும் இந்தியாவில் மட்டும்தான் விநியோகிக்கப்படுமா என்பது குறித்து சீரம், ஐசிஎம்ஆர் ஆகிய இரண்டின் பிரதிநிதிகளும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
உலகில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் 2வது இடத்தில் உள்ள இந்தியாவில் மொத்தம் 8.68 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருமிக்கு 128,000 பேர் பலியாகிவிட்டனர்.
இந்தியாவில் குறைந்தது இரண்டு உள்ளூர் நிறுவனங்கள் கொவிட்-19 தடுப்பூசிகளை உருவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
அவற்றில் 'டாக்டர் ரெட்டி லாப்' எனும் மருந்துத் தயாரிப்பு நிறுவனமும் ஒன்று. ரஷ்யா தயாரித்துள்ள தடுப்பூசிகளை இது, இந்தியாவில் சோதித்து வருகிறது.
இவ்வாரத் தொடக்கத்தில் ஃபைசரும் அதன் பங்காளி நிறுவனமான பயோஎன்டெக்கும் ஆரம்பக்கட்ட சோதனையில் தங்களுடைய தடுப்பூசிகள் 90 விழுக்காடு வலுவாகச் செயல்படுவதாக தெரிவித்தன.
இதனை இந்தியாவில் விநியோகிக்க இந்திய அரசாங்கத்துடன் சேர்ந்து முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் ஃபைசர் கூறியது.

