சென்னை: தமிழகத்தின் பல்வேறு அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே டிடிவி தினகரன் மகளின் நிச்சயதார்த்தம் ஆரவாரமின்றி நடைபெற்றுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும் தஞ்சாவூரில் பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவரான கிருஷ்ணசாமி வாண்டையார் மகன் ராம நாதன் துளசி அய்யாவுக்கும் திருமணம் செய்வதற்காக இரு தரப்பிலும் பேசி முடிவு செய்யப்பட்டது.
தினகரனின் விருப்பத்திற்கு ஏற்ப சசிகலா தலைமையில் நிச்சயதார்த்தத்தை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், சசிகலா விடுதலை பல்வேறு காரணங்களால் தடைபட்டதால் முதலில் நிச்சயதார்த்த விழாவை எளிமையாக நடத்திவிட்டு பின்னர் சசிகலா தலைமையில் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தலாம் என தீர்மானிக்கப் பட்டது.
இதையடுத்து இம்மாதம் 11ஆம் தேதி சுவாமிமலை அருகேயுள்ள தனியார் ரிசார்ட்டில் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.
ஆனால் குறைந்த அளவில் அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு மிகவும் நெருங்கிய உறவுகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.
இதற்காக ரிசார்ட்டில் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு மின் அலங்கார நுழைவுவாயில் அமைக்கப்பட்டது. மயில் போன்ற வடிவில் விழா மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தினகரன் தம்பி பாஸ்கரன், இளவரசி மருமகன் டாக்டர் சிவகுமார், அமமுகவின் பொருளாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ரெங்கசாமி என மொத்தமே அறுபது பேர் மட்டுமே கலந்துகொண்டனர். சசிகலா தம்பி திவாகரன் இதில் கலந்துகொள்ளவில்லை.
மாப்பிள்ளை வீட்டார் பிரம்மாண்ட முறையில் சீர்வரிசைத் தட்டு எடுத்து வந்தனர். தினகரன் மனைவி அனுராதா ஓடோடிச் சென்று அவர்களை வரவேற்றார். கிருஷ்ணசாமி வாண்டையார், தங்கள் குடும்பத்தினரை தினகரனிடம் அறிமுகம் செய்துவைத்தார்.
நிச்சயதார்த்த விழா என்றால் பெண்ணையும் மாப்பிள்ளையையும் ஒரே மேடையில் உட்காரவைத்து உறவினர்கள் அவர்களுக்குப் பொட்டு வைத்து வாழ்த்துவது தற்போதைய வழக்கம். ஆனால், பழைய வழக்கப்படியும் பாரம்பரிய முறைப்படியும் பெண் மட்டுமே மேடையில் அமர வைக்கப்பட்டார். ஜெயஹரிணிக்கு உறவினர்கள் சந்தனப் பொட்டு வைத்து வாழ்த்தி னர். மகளுக்கு நல்லபடியாக நிச்சய தார்த்தம் நடந்து முடிந்த பூரிப்பு தினகரன்-அனுராதா முகத்தில் தெரிந்தது. வரும் தை மாதத்தில் திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனர்.
சசிகலா விடுதலை குறித்து உறுதியான தகவல் வெளியான பிறகே திருமண தேதி குறிக்கப்படும் எனத் தெரிகிறது.

