மும்பை: இந்தியாவிலேயே முழுமையாகத் தயாரிக்கப்பட்ட ஸ்கார்பீன் ரக 'வாகிர்' நீர் மூழ்கிக் கப்பல் நேற்று முன்தினம் அரபிக் கடலில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
இது, இந்திய கடற்படைக்குச் சொந்தமான 5வது கப்பலாகும்.
மும்பையில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் மத்திய ராணுவ இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் மற்றும் அவரது மனைவி விஜயா ஆகியோர் காணொளிக் காட்சி வழி யாகப் பங்கேற்றனர்.
இதில் 'வாகிர்' நீர்மூழ்கி கப்பலின் சோதனை ஓட்டத்தை அமைச் சரின் மனைவி விஜயா தொடங்கி வைத்தார். வாகிர் நீர்மூழ்கி கப்பலின் சோதனை ஓட்டம் தொடங்கியிருப்பதன் மூலம் நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் திறனில் இந்தியாவின் நிலை இன்னும் உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக எம்டிஎல் எனும் மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது. ஸ்கார்ப்பீன் வரிசை நீர்மூழ்கி கப்பல்களில் 6வது கப்பலான வக்ஷீரும் சோதனை ஓட்டத்துக்கு தயாராகி வருகிறது.
இந்திய கடற்படையின் 'புரோஜெக்ட்-75' திட்டத்தின் கீழ் பிரான்ஸ் கடற்பாதுகாப்பு மற்றும் எரிசக்தி நிறுவனமான 'டிசிஎன்எஸ்' வடிவமைத்து மும்பையில் உள்ள மசாகன் கப்பல் கட்டும் தளத்தில் ஆறு நீர் மூழ்கி கப்பல்கள் கட்டப்பட்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இதுவரை கல்வாரி, கந்தேரி என்ற இரண்டு கப்பல்கள் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. 3வது நீர்மூழ்கிக் கப்பல் 'கரஞ்ச்', 4வது கப்பல் 'வேலா' கட்டி முடிக்கப்பட்டு சோதனை ஓட்டத்தைத் தொடங்கியுள்ளன. இந்த வரிசையில் 5வது நீர்மூழ்கிக் கப்பல் தற்போது வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. கடலின் மேற்பகுதியில் உள்ள எதிரி நாட்டு கப்பல்களைத் தாக்கி அழித்தல், நீர் மூழ்கிக் கப்பல்களை தாக்கி அழித்தல், கடற்பகுதி கண் காணிப்பு, எதிரி கப்பல்கள் பற்றி ரகசிய தகவல் களைச் சேகரித்தல் உள்ளிட்ட திறன்களை இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் பெற்றுள்ளன.

