பாட்னா: பீகாரில் தற்போதைய முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெற்றது.
முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரியா ஜனதா தளம்-காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய மெகா கூட்டணி தோல்வியடைந்தது. இதில் காங்கிரஸ் கடும் சரிவைச் சந்தித்தது.
கருத்துக் கணிப்புகள் எல்லாம் மெகா கூட்டணியே வெற்றி பெறும் என்று தெரிவித்த நிலையில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது அரசியல் கட்சிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்தத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மெகா கூட்டணி 110 இடங்களில் வெற்றி பெற்றது.
அதாவது வெற்றிக்கு 15 இடங்கள் குறைவாக மெகா கூட்டணி பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்தக் கூட்டணியின் சட்டசபை தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து பேசிய தேஜஸ்வி யாதவ், "பீகார் சட்டமன்றத் தேர்தலில் பண பலம், ஆள் பலம் மற்றும் சூழ்ச்சியால் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது," என்று குற்றம் சாட்டியுள்ளார்.
"ஆள் பலம் மற்றும் சூழ்ச்சியினால் தேசிய ஜக்கிய கூட்டணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. அந்த மோசடிகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கவுள்ளோம்," என்றும் அவர் சொன்னார்.
மெகா கூட்டணியில் இடம்ெபற்று உள்ள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளன. வாக்கு எண்ணிக்கையின் இறுதி கட்டத்தில் குளறு படிகள் நடந்துள்ளதாக இடதுசாரி கட்சிகள் கூறின.
இதற்கிடையே பீகார் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக அரசியல் கட்சிகள் கூறும் குற்றச்சாட்டு களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.
"மக்கள் முடிவே இறுதியானது. வாக்கு எண்ணிக்கை தொடர்பான அனைத்து விவரங்களையும் பீகார் தலைமை தேர்தல் அதிகாரி தெளிவு படுத்திவிட்டார்," என்றும் சுனில் அரோரா சொன்னார்.

