இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் காற்றுத்தரம் மோசமான நிலையில் இருந்து படுமோசமான நிலையை எட்டிவிட்டது.
உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ள பாதுகாப்பு அளவை விட 9 மடங்கு அதிகமாக காற்று தூய்மைக்கேடு அடைந்துவிட்டதால் மக்கள் ஒவ்வொருவரும் சுமார் 40 சிகரெட்டுகளைப் புகைக்கும் அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீபாவளிப் பண்டிகைக்கு அடுத்த நாளான நேற்று வடஇந்தியாவில், குறிப்பாக தலைநகரில் காலையில் தெளிவாகக் கண் தெரியாத அளவுக்குப் புகை மண்டி இருந்தது. தலைநகர் புதுடெல்லியை புகை மூட்டம் சூழந்துவிட்டதாக நேற்று ஊடகங்கள் தெரிவித்தன.
உலகில் மோசமான காற்றுத் தரத்தைக் கொண்ட நகர்களில் புதுடெல்லி இடம்பெற்றுள்ளது. பொதுவாக அக்டோபர், நவம்பரில் விவசாயிகள் வேளாண்மைக் கழிவுகளை எரிப்பதால் வட இந்திய நகர் களில் காற்றுத் தூய்மை கெடும்.
அதிகாரிகள் எவ்வளவு நடிவடிக்கைகளை எடுத்தாலும் காற்று தரத்தை நிலைநாட்ட முடியவில்லை.
இந்நிலையில், தீபாவளி வந்ததால் புதுடெல்லியில் பட்டாசு வெடிக்கக்கூடாது என்று முதல்வர் கெஜ்ரிவால் முழு கட்டுப்பாடுகளை விதித்தார். ஆனால் மக்கள் அவற்றை மதிக்காமல் கண்ட கண்ட இடங்களில் கண்டபடி யெல்லாம் வெடிகளை வெடித்தனர்.
போலிசார் 10 பேரைக் கைது செய்தனர். சுமார் 638 கிலோ பட்டாசுகள் கைப்பற்றப்பட்டன.
இருந்தாலும் ஏராளமான மக்கள் வெடிகளை வெடித்ததால் பட்டாசுப் புகையும் காற்றும் சேர்ந்து காற்றுத் தரத்தை சனிக்கிழமை மாலையில் மோசமடையச் செய்துவிட்டன. இந்நிலையில், நேற்று காற்றுத் தரம் மேலும் படுமோசமடைந்தது.
சனிக்கிழமை 300 g/m3 என்ற அளவுக்கு தூய்மைக்கேடு இருந்தது. இது நேற்று 543 g/m3 அளவுக்குக் கூடியது. 60 g/m3 என்பது பாதுகாப்பான அளவாகும்.
சுமார் 20 மில்லியன் பேர் (2 கோடி) வசிக்கும் தலைநகரில் 400,000 பேருக்கும் அதிக மக்களுக்கு கொவிட்-19 தொற்று இருப்ப தாக உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
காற்றுத் தரம் கெட்டுவிட்டதால் இந்த நோயாளிகளின் கதி என்ன ஆகுமோ என்ற கவலை அதிகமாகக் கூடிவிட்டது.

