உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 7 வயது சிறுமியின் சடலத்தை போலிசார் கண்டுபிடித்தனர்.
ஆனால், சிறுமியின் நுரையீரல், கல்லீரல் போன்ற உள்ளுறுப்புகள் வெட்டியெடுக்கப்பட்டிருந்ததாக போலிசார் தெரிவித்தனர்.
உடற்கூறு ஆய்வில், சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்துள்ளது.
கடந்த 1999ஆம் ஆண்டில் திருமணமான பரசுராம் - சுனைனா தம்பதி, குழந்தைகள் இல்லாததால் குழந்தை வரம் வேண்டி பூசை செய்வதற்காக பெண் குழந்தை ஒன்றின் உடல் உள்ளுறுப்புகள் வேண்டும் என்று அவ்வூரைச் சேர்ந்த பிரன், அன்குல் எனும் இருவரிடம் ரூ.1,000 கொடுத்தனர்.
அந்த இருவரில் ஒருவர் பரசுராமின் உறவினர். அந்த இருவரும், கடந்த சனிக்கிழமை இரவு நேரத்தில் கடைக்குச் சென்றுகொண்டிருந்த 7 வயது சிறுமியைக் கடத்திச் சென்றனர்.
மது அருந்திய இருவரும் குழந்தையைப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்க முயற்சி செய்து பின்னர் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் சிறுமியின் சடலத்திலிருந்து உள்ளுறுப்புகளை வெட்டி எடுத்துச் சென்று தம்பதியிடம் ஒப்படைத்தனர். சிறுமியின் சடலம் மறுநாள் காலை, அங்குள்ள காளி கோயிலுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தம்பதி உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர். சிறுமியின் அண்டைவீட்டார் இருவர்தான் அவரைக் கடத்தியதாகக் கூறப்படுகிறது. போலிஸ் விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ஐந்து லட்ச ரூபாய் உதவித் தொகை வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கின் விசாரணை விரைந்து முடிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

