ராஜஸ்தானின் தனியார் பால் பண்ணை ஒன்றில் ஒரே நாளில் 78 பசுக்கள் உயிரிழந்தன.
அம்மாநிலத்தின் சுரு மாவட்டத்துக்கு உட்பட்ட பிலியுபாஸ் ராம்புரா கிராமத்தில் அரசு உதவி பெறும் கால்நடை பண்ணை ஒன்று உள்ளது.
தனியார் பராமரித்து வரும் இந்த பண்ணையில் ஏராளமான பசுக்கள் உள்ளன. இங்கு நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரையிலான காலகட்டத்தில் 78 பசுக்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. மேலும் சில பசுக்கள் நோய்வாய்ப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
பசுக்களின் மரணத்துக்கான காரணம் குறித்து மாநில கால்நடைத்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
அந்த பசுக்களுக்கு வழங்கப்பட்ட தீவனம் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
பசுக்கள் உண்ட உணவு விஷமாக மாறியதால் இந்த பரிதாபம் நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் அறியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மற்ற பசுக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.


