இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களில் கொரோனா 2வது அலையால் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், டிசம்பர் மாதத்தில் மோசமான பாதிப்புகள் ஏற்படக் கூடும் என உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி, குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை உருவாகியுள்ளது. இதனால், அந்த மாநிலங்களில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 5,29,000ஐ கடந்துள்ளது.
குஜராத் மாநிலத்திலும் ஒரே நாளில் 1,495 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,97,000ஐ கடந்துள்ளது.
அதேபோல், ஹரியானா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,279 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்திலும் ஒரே நாளில் 3,260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், மொத்த எண்ணிக்கை 2,44,000ஐ நெருங்கியிருக்கிறது.
மணிப்பூர் மாநிலத்திலும் கொரோனா தொற்று எண்ணிக்கை தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில், டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் அசாம் மாநில அரசுகள் தற்போதைய கொரோனா பாதிப்பு மற்றும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யுமாறு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், நடப்பு மாதத்தில் மிகப்பெரிய அளவில் கொரோனா பரவல் இருக்கலாம் எனக் கூறியுள்ள உச்ச நீதிமன்றம், அனைத்து மாநிலங்களும் தற்போதைய நிலை குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த மாதமும் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடும் என உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே, இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 37,975 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 91,77,841 ஆக அதிகரித்துள்ளது.
கிருமித் தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 480 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,34,218 ஆக அதிகரித்துள்ளது.