தூதரகம் வழியாகத் தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியும் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலருமான சிவசங்கரை சுங்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
தங்கக் கடத்தல் வழக்கில் சிவசங்கருக்குத் தொடர்பு இருந்ததற்கான சான்றைச் சுங்கத்துறையினர் சமர்ப்பித்ததை அடுத்து, அவரைக் கைது செய்ய எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது.
இதனிடையே, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியதற்கும் தங்கக் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பிருப்பது குறித்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. தங்கக் கடத்தல் நடவடிக்கைகளின் மூளையாக சிவசங்கர் செயல்பட்டிருக்கலாம் என்று அமலாக்கத் துறை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அமலாக்கத் துறையால் கடந்த மாதம் 29ஆம் தேதி கைது செய்யப்பட்ட சிவசங்கர், எர்ணாகுளம் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, நேற்று அந்தச் சிறைச்சாலைக்குச் சென்ற சுங்கத்துறை அதிகாரிகள், தங்களாலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முறைப்படி பதிவுசெய்தனர்.
இவ்வேளையில், சிவசங்கர் தாக்கல் செய்துள்ள பிணை மனு தொடர்பில் கருத்துரைக்கும்படி அமலாக்கத் துறையைக் கேரள உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது. குறிப்பிட்ட சில வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை மட்டும் தேர்வு செய்து நீதிமன்றத்தில் முன்வைத்து, தவறாக வழிநடத்தி, தங்கக் கடத்தல் வழக்கில் தம்மைச் சிக்கவைக்க அமலாக்கத் துறை முயன்று வருவதாக சிவசங்கர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது பிணை மனு குறித்த வழக்கு அடுத்த மாதம் 2ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.