இந்தியாவின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் அகமது படேல் காலமானார். அவருக்கு வயது 71.
கடந்த மாதம் முதல் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், முழுமையாக குணமடையாத நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மோசமடைந்ததால் அவர் குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.
அவரது நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன் அவரது மற்ற உடலுறுப்புகளும் பாதிக்கப்பட்டதையடுத்து, அவரது உடல்நிலை மோசமடைந்து இன்று அதிகாலையில் அவரது உயிர் பிரிந்தது.
அவரது மறைவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். அதில் ‘‘ஈடுசெய்ய முடியாத நண்பர் அகமது படேலை இழந்துவிட்டேன். விசுவாசமுள்ள தொண்டரை இழந்துவிட்டேன். தனது முழு வாழ்க்கையையும் காங்கிரஸுக்கு அர்ப்பணித்தவர்,’’ எனக் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இது ஒரு சோகமான நாள். அகமது படேல், காங்கிரஸ் கட்சியின் தூணாக விளங்கினார். சோதனையான காலங்களில் கட்சியுடன் இணைந்து செயலாற்றியவர்” என்று தெரிவித்துள்ளார். அவரது மறைவு ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரியங்கா காந்தி தமது இரங்கல் செய்தியில் வெளியிட்டுள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், மல்லிகார்ஜூன கார்கே எம்பி, அபிஷேக் சிங்வி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.