வங்கக் கடலில் அதி பயங்கர புயலாக உருவான நிவர் பேரிடரில் இருந்து தமிழகம் தப்பிவிட்டது. அந்தப் புயல் எதிர்பார்க்கப்பட்டதைப் போல் கரையேறாமல் வலுவிழந்துவிட்டதால் பெரும் பாதிப்பில் இருந்து அந்த மாநிலம் தப்பிவிட்டது.
ஆனால் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த மிரட்டல் உருவாகி இருப்பதால் மாநிலம் மீண்டும் பரபரப்பாகி உள்ளது.
நிவர் புயல் நேற்று அதிகாலை நேரம் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இருந்தாலும் அதற்கு முன்பாகவே அது வலுவிழந்துவிட்டது.
மாநிலத்தின் பல பகுதிகளிலும் கடுமையான மழையையும் சூறா வளிக் காற்றையும் ஏற்படுத்திய நிவர், மீண்டும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி வடக்குப் பகுதிக்குச் சென்று மேலும் வலுவிழந்துவிடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்தது.
இந்தப் புயல் காரணமாக தமிழ்நாட்டில் மூன்று பேர் மாண்டுவிட்டனர்; மூன்று பேர் காயமடைந்தனர்; 101 குடிசைகள் சேதமடைந்தன; 380 மரங்கள் சாய்ந்தன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் மொத்தம் 145,000 பேர் அப்புறப்படுத்தப்பட்டு 1,516 நிவாரண முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக தமிழ்நாடு பேரிடர் நிர்வாகத் துறை அமைச்சர் உதயகுமார் கூறினார்.
நிவர் புயலின் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டு இருந்ததால் மாநிலத்தில் பேருந்து, ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இரண்டு நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.
புயலைச் சமாளிக்க மத்திய அரசாங்கம் அனைத்து உதவிகளுக்கும் உறுதி கூறி இருந்தது. பல படைகளும் தயார் நிலையில் இருந்தன. பலரும் பாராட்டும் அளவிற்கு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.
இருந்தாலும் புயல் பாதிப்பு முன்னுரைக்கப்பட்ட அளவுக்கு இல்லை. புயல் தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட கடலோர மாவட்டங்களில் பல இடங்களிலும் நேற்று வழக்கநிலை திரும்பிவிட்டது. மழை ஓய்ந்து வெயில் அடிக்கத் தொடங்கியது. புயல் காரணமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம் நேற்றுக் காலை முதல் செயல்படத் தொடங்கியது.
இவ்வேளையில், வரும் 29ஆம் தேதி வங்கக் கடலின் தென்கிழக்குப் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் அந்தத் தாழ்வுநிலை தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறுவதற்கான வாய்ப்புகளும் உண்டு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரித்தது.