மகாராஷ்டிராவில் பாலியல் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அம்மாநில அரசு உதவித்தொகை அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுப் பரவலால் மும்பையில் பாலியல் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கும் அரசு உதவி செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்த நிலையில் மகாராஷ்டிர அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட அம்மாநில அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் யசோமதி தாக்கூர், “மகாராஷ்டிராவில் பாலியல் தொழிலாளர்களுக்கு அக்டோபர் முதல் டிசம்பர் வரை மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும். மகாராஷ்டிர மாநில அரசு இந்த திட்டத்துக்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கும் கூடுதலாக ரூ.2500 வழங்கப்படும்,” என்று தெரிவித்தார்.
“மாநில அரசு அறிவித்த ஊரடங்குக்கு பாலியல் தொழிலாளர்களும் ஒத்துழைப்பு வழங்கினர். இந்தத் திட்டத்தால் 31,000 பேர் பயனடைவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.