இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய ஏழு நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
அந்த நிறுவனங்களின் தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதித்து பார்க்கும் பணி, இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்களில் இருக்கிறது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் மூன்று நிறுவனங்களுக்கு இந்தியப் பிரதமர் மோடி நேற்று சென்றார்.
முதல் கட்டமாக குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே சாங்கோதர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஸைடஸ் காடிலா நிறுவன ஆலைக்கு நேற்று காலை நேரில் சென்றார். அங்கு அந்நிறுவனம் தயாரிக்கும் ‘ஸைகோவ்-டி’ தடுப்பூசியின் இரண்டாவது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. அதன் முன்னேற்றம் குறித்து மோடி கேட்டறிந்ததோடு, தடுப்பூசி உற்பத்திப் பணிகளைப் பார்வையிட்டார்.
ஸைடஸ் கெடிலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, நிர்வாகிகள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருடன் கொரோனா தடுப்பு மருந்து தயாரி்க்கும் பணி, பரிசோதனை நிலவரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
பிபிஇ ஆடை அணிந்து, முகக்கவசம் அணிந்து நிறுவனத்துக்குள் சென்ற பிரதமர் மோடி, கொரோனோ தடுப்பு மருந்துப் பணிகளை நேரில் ஆய்வுசெய்தார்.
அப்போது பிரதமர் மோடியிடம் கொரோனா தடுப்புப் பணிகள், பரிசோதனையின் கட்டம் ஆகியவற்றை ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர்.
அவர்களிடம் பிரதமர் மோடியும் பல்வேறு சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெற்றார் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கெடிலா நிறுவனத்தின் சார்பில் கொரோனா தடுப்பு மருந்து மக்களின் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது.
“அகமதாபாத்தில் உள்ள ஸைடஸ் கெடிலா பயோடெக் பார்க் நிறுவனத்துக்குச் சென்றேன். அங்கு கொரோனா கிருமிக்கு எதிராக உள்நாட்டிலேயே மரபணு அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படும் தடுப்பு மருந்து குறித்த விவரங்களைக் கேட்டறிந்தேன்.
“இந்த பணிக்குப் பின்புலத்தில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு என்னுடைய பாராட்டுகள். இந்த மருந்து தயாரிக்கும் குழுவின் பயணத்துக்கு அரசு தேவையான உதவிகளை அளித்து துணையாக இருக்கும்” என்று பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டார்.
ஏறக்குறைய ஒரு மணிநேரம் ஸைடஸ் கெடிலா நிறுவனத்தில் இருந்த பிரதமர் மோடி இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு அங்கிருந்து ஹைதராபாத்துக்குப் புறப்பட்டார். ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக்கில் தயாரிக்கப்படும் உள்நாட்டு தடுப்பூசி குறித்து பிரதமர் மோடிக்கு விளக்கமளிக்கப்பட்டது.
“இதுவரை நடைபெற்ற சோதனைகளில் வெற்றிகண்ட விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். விரைவான முன்னேற்றத்தை எளிதாக்க பாரத் பயோடெக்கைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத்துடன் நெருக்கமாக செயல்பட்டு வருகின்றனர்,” என்று பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டார்.
இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க இந்திய விஞ்ஞானிகள் விரைகின்றனர்.