மும்பை: பெண் குழந்தைகளைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மும்பை சிறப்புப் படை போலிஸ் பிரிவைச் சேர்ந்த போலிஸ் அதிகாரி ஒருவருடைய மகளான 5 வயது உர்வி நூதன முயற்சி ஒன்றில் ஈடுபட்டார்.
பெண் குழந்தைகளைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம் என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் தமது பிறந்தநாள் கொண்டாட்டம் அமைய வேண்டும் என்று உர்வி விரும்பினார்.
இதைப் பற்றி அவர் தமது தந்தையிடம் தெரிவிக்க அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
வித்தியாசமான முறையில் நடுக் கடலில் பிறந்தநாளைக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, உர்வி, அவரது பெற்றோர், அவர்களுக்கு நெருக்கமான சிலர் ஆகியோர் அர்னாலா கடற்கரையிலிருந்து படகு மூலம் 3.6 கிலோ மீட்டர் தூரம் கடலுக்குள் சென்றனர்.
உயிர்காக்கும் மிதவைகளை அணிந்துகொண்டு தமது தந்தையுடன் உர்வி கடலில் இறங்கினார்.
தெர்மோகால் உதவியுடன் கேக்கை கடலில் மிதக்க விட்டு அதனை வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். உர்வி வெட்டிய கேக்கில் ‘பெண் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்’ என்ற வரிகள் இடம்பெற்று இருந்தன. 5 வயது சிறுமியின் இந்தச் சமூக அக்கறை கொண்ட செயலுக்குப் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.