கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் ஈடுபட்டிருந்த ஒருவர் உடல்நல பாதிப்புகள் காரணமாக அதிலிருந்து விலகிவிட்டார். அத்துடன், தனக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளுக்கு இழப்பீடாக ரூ.5 கோடி கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆகஸ்ஃபர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பு மருந்தின் பரிசோதனைகளை புனேவின் சீரம் நிறுவனம் மத்திய அரசின் மேற்பார்வையில் நடத்துகிறது.
சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் இந்த தடுப்பு மருந்து எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறதா என கண்டறியும் சோதனை நடைபெற்றது.
இதில் அண்ணா நகரைச் சேர்ந்த 40 வயது ஆடவர் பங்கேற்றார். அவருக்கு அக்டோபர் 1ஆம் தேதி தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது.
அடுத்த பத்து நாட்களில் அவருக்கு உடல் நலம் பாதிப்படைய ஆரம்பித்ததாக அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தலைவலி, உடல் அயற்சி, குடும்பத்தாரையே அடையாளம் கண்டறிய முடியாத நிலை, அடிக்கடி கோபப்படுவது என பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 12ம் தேதி முதல் 26ம் தேதி வரை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் அவர். ஆனால், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே, தனக்கு இழப்பீடாக 5 கோடி ரூபாய் வழங்குவதோடு இந்த சோதனையை உடனே நிறுத்துமாறும் அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தடுப்பு மருந்து கொடுப்பதற்கு முன் அவர் வழக்கமாக தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதன் காரணமாகவே அவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராமச்சந்திரா மருத்துவமனை விளக்கம் அளிக்கவில்லை என நியூஸ்18 செய்தி குறிப்பிடுகிறது.