இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெற்றிகரமான முறையில் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆண்டின் தொடக்கத்தில் முதலில் 30 கோடி பேருக்குத் தடுப்பு ஊசி போட திட்டமிடப்பட்டுள்ளது. பிறகு மற்றவர்களுக்கும் தடுப்பு ஊசி மூலம் நோய்த் தடுப்பு ஆற்றல் மேம்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொவிட்-19 தடுப்பு ஊசி அங்கீகரிக்கப்பட்டதும் அந்த ஊசியை மக்களுக்குப் போடும் பணியில் ஈடுபட அரசாங்க ஊழியர்கள் 70,000 பேர் தயாராக இருக்கிறார்கள்.
தனியார் துறையைச் சேர்ந்த 30,000 பேர் தேவைப்படுவார்கள் என்றும் அவர்களைத் திரட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரபூர்வ தகவல்வட்டாரங்கள் கூறியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவர்களில் மருத்துவர்கள், தாதியர், ஆய்வுக்கூட தொழில்நுட்பர்கள் முதலானோர் அடங்குவர்.
நன்கு பயிற்சி பெற்ற ஒருவர், ஒரு மணி நேரத்தில் 20 முதல் 25 பேருக்கு தடுப்பு ஊசி போட முடியும் என்றாலும் அந்த அளவுக்கு வேகமாக செயல்பட வேண்டாம் என்று ஊழியர்களுக்கு உத்தரவிடப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.
அந்த 70,000 அரசாங்க ஊழியர்களும் இப்போது பொது தடுப்பூசிச் செயல்திட்டத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் முதல் கட்டத்தில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
முதலாவதாக சுகாதாரப் பராமரிப்பு மற்றும் முன்களப் பணியாளர்கள் மீது ஒருமித்த கவனம் செலுத்தப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியா, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி மையமாகத் திகழ்கிறது. அது, தானே ஆய்வுகளை நடத்தி கொரோனா கிருமித் தடுப்பு ஊசியைப் பரிசோதித்து வருகிறது.
‘கோவேக்சின்’ என்று பெயரிடப்பட்டு உள்ள இந்திய தடுப்பூசி, ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்தால் உருவாக்கப்படுகிறது. இந்தத் தடுப்பூசியின் 3ஆம் கட்ட மருந்தகப் பரிசோதனையில் உற்சாகமான அறிகுறிகள் தென்படுவதாக ‘பாரத் பயோடெக்’ தெரிவித்தது.
இதனிடையே, இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு முந்தைய 24 மணி நேரத்தில் புதிதாக 41,810 பேருக்குக் கிருமி தொற்றியதாக மத்திய சுகாதார அமைச்சு இன்று தெரிவித்தது.
அவர்களையும் சேர்த்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9.91 மில்லியன் ஆகியது. கொவிட்-19 தொற்றால் புதிதாக 496 பேர் மரணம் அடைந்துவிட்டனர். உயிர் இழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 136,696 ஆகியது.
மொத்தம் ஏறக்குறைய 8.80 மில்லியன் பேர் குணமடைந்துள்ளனர். 453,956 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
குணமடைந்தோர் விகிதம் 93.71% ஆக கூடி இருக்கிறது. இன்று காலை நிலவரப்படி சுமார் 140 மில்லியன் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் தெரிவித்தது.