வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அது 24 மணி நேரத்தில் புயலாக மேலும் வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘புரெவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தப் புயல் சின்னம் இலங்கையின் திரிகோண மலையிலிருந்து 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாகவும் இன்று மாலை அல்லது இரவில் இலங்கையில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, தென் தமிழகம், கேரளாவில் மிக கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் கரைக்குத் திரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.