தமிழக சட்டப்பேரவை தேர்தல் உள்ளிட்ட மாநில தேர்தல்களில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிப்பதன் தொடர்பில் தயார்நிலையில் இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுவாழ் இந்தியர்களை வாக்களிக்க வகைசெய்ய இயலுமா என சட்ட அமைச்சகம் கேட்டதற்கு தேர்தல் ஆணையம் இவ்வாறு பதிலளித்துள்ளது.
வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை வாக்களிக்க வைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
இதற்காக பல்வேறு வகையான ஆலோசனைகளை மத்திய சட்ட அமைச்சகமும், இந்திய தலைமை தேர்தல் ஆணையமும் நடத்தி வந்தன.
இதுதொடர்பாக புதிய சட்டம் அல்லது சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்காக மத்திய சட்ட அமைச்சகம் முயற்சி செய்து வருகிறது.
அதன் தொடர்பிலான சட்ட அமைச்சகத்தின் கேள்விக்கு அளித்த பதிலில் “வெளிநாடுவாழ் இந்தியர்களை இந்திய தேர்தல்களில் வாக்களிக்க வைப்பது சாத்தியம் தான். அதற்கான வழிமுறைகள் உள்ளன,” என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது..
“தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலேயே அதனை அமல்படுத்த தயாராக இருக்கிறோம். இணையம் வழியாக இது சாத்தியமாகும்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.