வீட்டின்மீது கைச்சுத்திகரிப்பானை ஊற்றித் தீ வைத்ததில் வீட்டினுள் இருந்த செய்தியாளர் ஒருவரும் அவருடைய நண்பரும் உயிரிழந்தனர்.
உ.பி. தலைநகர் லக்னோவை மையமாகக் கொண்டு செயல்படும் ‘ராஷ்ட்ரிய ஸ்வரூப்’ எனும் நாளிதழில் செய்தியாளராகப் பணியாற்றி வந்தார் ராகேஷ் சிங் நிர்பிக், 37.
தமது சொந்த ஊரான கல்வார் கிராமப் பஞ்சாயத்துத் தலைவரும் அவரின் மகன் ரிங்கு மிஸ்ராவும் மேற்கொண்ட ஊழல்கள் குறித்து திரு ராகேஷ் தொடர்ந்து அந்நாளிதழில் எழுதி வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரிங்கு, சில நாள்களுக்குமுன் திரு ராகேஷ் வீட்டின்மீது கைச்சுத்திகரிப்பானை ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினார்.
அப்போது வீட்டினுள் இருந்த திரு ராகேஷுக்கும் அவருடைய நண்பர் 34 வயது பின்டு சாஹுவிற்கும் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டன.
சம்பவ இடத்திலேயே திரு சாஹு மாண்டுவிட்ட நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சில மணி நேரத்தில் திரு ராகேஷும் உயிரிழந்தார்.
இறப்பதற்குமுன் அவரிடம் காணொளி வாக்குமூலம் பெறப்பட்டது. அதில், “உண்மையை உரக்கச் சொன்னதற்குக் கிடைத்த பரிசு இது,” என்று திரு ராகேஷ் சொன்னதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் ரிங்கு உள்ளிட்ட மூவரை போலிஸ் கைது செய்துள்ளது.