புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரும் விவசாயிகளின் போராட்டம் நேற்று ஆறாவது நாளை எட்டியதை அடுத்து, மத்திய அமைச்சர்கள்-விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையே டெல்லியில் நேற்றுப் பிற்பகலில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வர்த்தக, தொழில் அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தக, தொழில் இணை அமைச்சர் சோம் பர்காஷ் ஆகியோர் அரசாங்கத் தரப்பில் பங்கேற்றனர்.
முன்னதாக, பஞ்சாப்பைச் சேர்ந்த 32 விவசாயச் சங்கங்கள் உட்பட மொத்தம் 36 விவசாயச் சங்கங்கள் அரசாங்கம் விடுத்த அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஒப்புக்கொண்டன. அதே நேரத்தில், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் எனும் தங்களது கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என அவை வலியுறுத்தி இருந்தன.
அதே வேளையில், பஞ்சாப்பின் ‘விவசாயத் தொழிலாளர் போராட்டக் குழு’ பேச்சுவார்த்தையில் இடம்பெற மறுத்துவிட்டது.
“இந்தியாவில் கிட்டத்தட்ட 500 விவசாயக் குழுக்கள் உள்ளன. அவற்றில் 32 குழுக்களுக்கு மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்க மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன், பிரதமர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கப் போவதில்லை. இந்தக் காரணங்களுக்காக, நாங்கள் பேச்சுவார்த்தையில் இடம்பெறமாட்டோம்,” என்று அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் சர்வான் சிங் பந்தேர் கூறினார்.
“புதிய சட்டங்களை ரத்து செய்து, குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பில் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்துவோம். அரசாங்கம் அதற்கு இணங்கவில்லை எனில் போராட்டத்தைத் தொடர்வோம்,” என்றார் பாரதிய விவசாயிகள் சங்கத்தின் ஜக்ஜீத் சிங் தாலேவால்.
இவ்வேளையில், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள், மத்திய அரசுப் பிரதிநிதிகள், வேளாண் வல்லுநர்கள் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவை அமைத்து, புதிய சட்டங்கள் குறித்து விவாதிக்கலாம் என்று பேச்சுவார்த்தையின்போது மத்திய அரசு தரப்பில் ஓர் ஆலோசனை முன்வைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இதனிடையே, விவசாயிகளின் போராட்டம் அனைத்துலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. கனடாவில் வாழும் சீக்கியர்களுக்கு குருநானக் ஜெயந்தி வாழ்த்துகளைத் தெரிவித்த அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் கவலையளிப்பதாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
ஆனால், உண்மையை அறியாமல் பேசியிருப்பதாகக் கூறி, இந்திய அரசு அவருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.