தங்கக் கடத்தல் விவகாரத்தில் வெளிநாட்டினர் பலரும் உயரதிகாரிகள் பலரும் சம்பந்தப்பட்டுள்ளதாக முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் துணைத் தூதரக ஊழியர்களுடன் வெளிநாட்டுக் குடிமக்கள் பலரும் தங்கக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தனர் என்று ஸ்வப்னா தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அவரது வாக்குமூலம் முத்திரையிடப்பட்ட உறையில் வைக்கப்பட்டு, பொருளியல் குற்றங்களுக்கான நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதாக அறியப்படுகிறது.
கடந்த மாதம் 27ஆம் தேதி சுங்கத்துறை விசாரணையின்போது ஸ்வப்னா அளித்த தகவல்கள், தங்கக் கடத்தல் வழக்கில் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
தங்கம் மட்டுமின்றி அமெரிக்க டாலரும் கடத்தப்பட்டது குறித்து ஸ்வப்னா வாய்திறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் பல பெரும்புள்ளிகளுக்கும் பங்கிருப்பதாக விசாரணைக் குழு கோடிகாட்டியது.
அதே நேரத்தில், அவர்கள் யார் என்பதை அதிகாரிகள் குறிப்பிடவில்லை. நீதிமன்ற ஆணையிலும் அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.
இவ்வேளையில், ஸ்வப்னாவின் கூட்டாளியாகக் கருதப்படும் சரித்திடம் கடந்த மாதம் 28ஆம் தேதி வாக்குமூலம் பெறப்பட்டு, அதுவும் முத்திரையிடப்பட்ட உறையில் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது. சரித்தின் வாக்குமூலமும் ஸ்வப்னாவின் வாக்குமூலமும் பெரும்பாலும் ஒத்துப்போவதாகச் சொல்லப்படுகிறது.
இதனிடையே, ஸ்வப்னாவையும் சரித்தையும் மேலும் மூன்று நாள்கள்காவலில் வைக்க எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தங்கக் கடத்தலில் வெளிநாட்டவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து தேசிய புலனாய்வு முகவை விசாரிக்கும் எனக் கூறப்பட்டது. ஆகையால், விசாரணைக்காக அந்த அமைப்பும் ஸ்வப்னாவைக் காவலில் எடுக்கக்கூடும்.