கொரோனா கிருமிப் பரவல் காரணமாக சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளபோதிலும் அங்கு ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.
அங்கு தற்போது வாரநாட்களில் 2,000 பக்தர்களும், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் 3,000 பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோயிலின் வருவாய் இழப்பைக் கருத்தில் கொண்டு, திருவிதாங்கூர் தேவஸ்தானம் மற்றும் தலைமைச் செயலாளர் தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில் கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்ய கேரள அரசு அனுமதி வழங்கியது.
ஆனால் சுகாதாரத் துறை சார்பில் சபரிமலை தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே கோயில் பணியில் இருந்த 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், நேற்று மேலும் 16 தேவஸ்தான ஊழியர்கள், ஒரு காவலர் என மொத்தம் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சபரிமலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, சிறப்புப் பணிக்காக சபரிமலைக்குச் சென்றுள்ள போலிசார் உள்பட அனைவருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனையை மீண்டும் நடத்த சுகாதாரத்துறை தீர்மானித்து உள்ளது.
ஊழியர்களுக்கு கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தந்திரி, மேல்சாந்தி மற்றும் கீழ் சாந்திகளுக்கு கொரோனா பரவாமல் தடுக்க கோயிலில் கூடுதல் கட்டுப்பாடுகளை கொண்டு வர தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.