இந்தியாவில் ஐந்து கொரோனா தடுப்பூசி மருந்துகள் இறுதிக்கட்ட ஆய்வில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அந்த ஐந்து மருந்துகளில் ஏதேனும் ஒன்றுக்கு இந்திய மருந்துக்கட்டுப்பாட்டுக் கழகம் 'அவசர அங்கீகாரம்' அளிக்கும் என எதிர்பார்ப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநரான மருத்துவர் ரன்தீப்குலேரியா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடடம் பேசிய அவர், ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு இங்கிலாந்து அங்கீகாரம் அளித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் விநியோகிப்பது பெரும் சவாலாக இருக்கும் என்றும் அத்தடுப்பூசியை மைனஸ் 70 டிகிரி தட்பவெப்பத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டியது அவசியம் என்றும் மருத்துவர் ரன்தீப் குறிப்பிட்டார்.
"இதற்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் நிச்சயம் தேவை. மற்றபடி தடுப்பூசி, மருந்துகளை நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் எளிதில் விநியோகிப்பதற்கான வசதி இந்தியாவில் உள்ளது," என்றார் மருத்துவர் ரன்தீப்.
இந்தியாவில் ஃபைசர், ஆஸ்ட்ராஜெனகா, பாரத் பயோடெக், சைடஸ் கெடிலா, டாக்டர் ரெட்டிஸ் லேப் ஆகிய ஐந்து நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிகளின் இறுதிக்கட்ட ஆய்வு நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தவுடன் இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து போடும் பணி விரைவாக தொடங்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

