தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஸ்வப்னா சுரேஷுக்கு கேரள அரசு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என கொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறையில் தமது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக ஸ்வப்னா தாக்கல் செய்த மனுவை விசாரித்தபின் இவ்வாறு உத்தரவிடப்பட்டது.
ஐக்கிய அமீரக சிற்றரசின் திருவனந்தபுர தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி கிலோ கணக்கிலான தங்கம் கேரளாவுக்குள் கடத்தி வரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் உட்பட பலர் கைதாகியுள்ளனர்.
இந்நிலையில் தமக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக ஸ்வப்னா கூறியுள்ளார். செல்வாக்கு மிக்க சிலரால் சிறை வளாகத்துக்குள் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் கடத்தல் வழக்கு தொடர்பில் முக்கிய அரசியல்வாதிகளின் பெயரை வெளிப்படுத்தக்கூடாது என்று அதிகாரிகள் தம்மை வற்புறுத்தியதாகவும் ஸ்வப்னா கூறியுள்ளார்.
"விசாரணை அமைப்புகளுடன் ஒத்துழைக்கக்கூடாது என்றும் அதிகாரிகள் என்னிடம் கூறினர். இல்லையென்றால் எனது குடும்பத்துக்குத் தீங்கு நேரிடும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டது," என்று ஸ்வப்னாவின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து அவருக்குப் பாதுகாப்பு வழங்க கேரள மாநில சிறைத் துறைத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்வப்னாவின் புகார் குறித்து தேசிய புலனாய்வு முகமையும் அமலாக்கத் துறையும் விசாரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன், சட்டப்பேரவைத் தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

