ஜார்கண்ட் மாநிலத்தில் டும்கா என்ற வட்டாரத்தில் முஃபாசில் என்ற இடத்தில் ஓர் ஆடவரைக் கட்டிப்போட்டுவிட்டு அவரின் 35 வயது மனைவியை 17 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பிவிட்டு இருக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்மணி மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு இருக்கிறார். போலிஸ் அதிகாரிகள் உடனடி விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள்.
அந்த மாது செவ்வாய்க்கிழமை கடைக்குச் சென்று காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டு இருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக உயர் போலிஸ் அதிகாரி சுதர்ஷன் மண்டேல் தெரிவித்தார்.
வழியில் அந்தத் தம்பதியை மடக்கிய 17 ஆடவர்கள், கணவரைக் கட்டிப்போட்டுவிட்டு மனைவியை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தினர்.
அத்தம்பதியர் போலிசிடம் தாக்கல் செய்த புகாரில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. தம்பதிக்கு 5 பிள்ளைகள் இருப்பதாகக் கூறப்பட்டது.
சம்பவம் இரவு நேரத்தில் நிகழ்ந்ததால், அந்த 17 பேரில் ஒருவரை மட்டுமே தெரியும் என்று அந்தப் பெண் தெரிவித்துள்ளார். ராமு மொஹில் எனும் 34 வயது ஆடவரை போலிசார் கைது செய்தனர்.
புகாரை ஏற்றுக்கொண்ட போலிஸ் அதிகாரிகள், அந்த 17 பேரையும் பிடிக்க உடனடியாக நடவடிக்கையைத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த விவகாரம் அரசியலில் விஸ்வரூபம் எடுக்கக்கூடும் என்று தெரிகிறது.
இது பற்றி கருத்து கூறிய ராஷ்டிரிய ஜனதாதள கட்சித் தலைவர் ஷிவாரி, “கடுமையான சட்டங்கள் மட்டும் இத்தகைய காரியங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடாது.
“கைபேசியில் போதை நடனங்கள், விளம்பரங்கள், ஆபாசப் படங்கள் எல்லாம் தங்குதடையின்றி கிடைப்பதால் பாலியல் கொடூரங்களுக்கு ஊக்கம் ஏற்படுகிறது,” என்று குறிப்பிட்டார். சட்டங்களைக் கடுமையாக அமல்படுத்தினால்தான் இதற்குத் தீர்வு காண முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
பீகார் துணை முதல்வர் ரேணு தேவி, இந்தப் பாலியல் கொடுமையைக் கடுமையாகக் கண்டித்தார். இதற்கு ஜார்கண்ட் அரசாங்கமும் காரணம் என்ற அவர், அது சட்டத்தை முழுமையாக அமலாக்குவதில்லை என்று கூறினார்.
இவ்வேளையில், தேசிய மாதர் ஆணையம், இதன் தொடர்பிலான விரிவான செயல் அறிக்கை வேண்டும் என்று கேட்டுள்ளது.
இதற்கிடையே, விசாரணையின்போது அந்தப் பெண் மாற்றி மாற்றி பேசி வருவதாகவும் அவரது உடலில் காயம் இல்லை என்று மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மற்றொரு மருத்துவப் பரிசோதனை முடிவுகளுக்காக அதிகாரிகள் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.