உரிமைகளுக்காகவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தங்களைத் தீவிரவாதிகள் போல் நடத்தக்கூடாது எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் மத்தியில் பிளவை உண்டாக்கி போராட்டத்தைத் திசைதிருப்ப மத்திய அரசு முயற்சி செய்வதாகவும் விவசாய சங்கத் தலைவர்கள் புகார் எழுப்பி உள்ளனர்.
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வரும் நிலையில், ஹரியானா மாநில எல்லையில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருப்பதாகவும் நிலைமை கட்டுக்கடங்காமல் இருப்பதாகவும் அம்மாநிலக் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஹரியானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் டெல்லியை நோக்கிச் செல்வதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது சுமார் 30 விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் சில சங்கங்கள் போராட்டக் களத்தில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்துள்ளன. இதனால் போராட்டத்தை முன்னெடுத்துள்ள மற்ற சங்கங்களின் தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மத்திய அரசுடன் பேசிப் பலனில்லை என்பதால் தங்கள் போராட்டத்தை வேறு வகையில் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாக கிஸான் சன்யுக்த் மோர்ச்சாவின் தலைவர் ஷிவ்குமார் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் மத்தியில் பிளவை உண்டாக்கி போராட்டத்தைத் தோல்வியுறச் செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பாரதிய கிஸான் யூனியன் தலைவரான குருநாம்சிங் சாருணி கூறுகையில், 40 முக்கிய விவசாயச் சங்கங்கள் ஒன்றாகக் கூடி ஒருமித்த கருத்துடன் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றன என்றார்.
இதற்கிடையே விவசாயிகள் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சமூக செயல்பாட்டாளர் அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினர் முன்பு ஆட்சியில் இருந்தபோது புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

