மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில் அங்கு முதற்கட்டமாக 30 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அம்மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு தடுப்பூசிகளை இலவசமாக வழங்காவிட்டாலும் மாநில அரசு உரிய ஏற்பாடுகளைச் செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது கணிப்பின்படி மருத்துவ ஊழியர்கள், சுகாதார, முன்களப் பணியாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், பிற நோய் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை மட்டும் 3 கோடி வந்துவிடும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசு தடுப்பூசியை இலவசமாக வழங்கவேண்டும் என வலியுறுத்திய ராஜேஷ் தோபே, இதுதொடர்பான மத்திய அரசின் அறிவிப்புக்காக மகாராஷ்டிர அரசு காத்திருப்பதாகத் தெரிவித்தார்.
மத்திய அரசு அனுமதி வழங்கும் பட்சத்தில் மகாராஷ்டிராவில் ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தடுப்பூசி போட அடையாளம் காணப்படுபவர்களுக்கு கைபேசி வழி குறுந்தகவல் அனுப்பப்படும் என்று குறிப்பிட்ட அவர், மருந்து செலுத்தப்பட்டபின் அரை மணி நேரம் மருந்து செலுத்தும் மையத்தில் இருக்கவேண்டியது அவசியம் என்றார். இதுபோன்ற நடைமுறைகள் எந்தவித சமரசமுமின்றி கடுமையாகப் பின்பற்றப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

