பிற நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்வதில் நேப்பாள அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
இவ்விஷயத்தில் இலங்கையைப் பார்த்து நேப்பாளம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சீனாவை மறைமுகமாகக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு அறிவுறுத்தி இருப்பதாகக் கருதப்படுகிறது.
"இந்தியாவுக்கும் நேப்பாளத்துக்கும் இடையேயான உறவு ஆழமானது மற்றும் பரவலானது. எனினும் தனது சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கைகளின் அடிப்படையில் தற்போது சீனா உள்ளிட்ட இதர நாடுகளுக்கும் நேப்பாளம் தனது கதவுகளைத் திறந்து விட்டுள்ளது.
"அனைத்துலக விவகாரங்கள் தொடர்பாக நேப்பாள அரசு சுதந்திரமாகச் செயல்படலாம். நேப்பாளமும் இந்தியாவும் ஏற்கெனவே பிரிக்க இயலாத வகையில் நெருக்கமாக உள்ளன. இந்நிலையில் அமைதி மற்றும் வளத்தைக் காக்கும் வகையில் தற்போதுள்ள உறவை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது," என்று பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் நேப்பாளத்துக்கும் இடையேயான உறவு இமயமலையைப் போல் உயரமானது என்றும் இந்தியப் பெருங்கடல் போன்று ஆழமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இருநாடுகளுக்கும் இடையேயான பொருளாதாரத் தொடர்புகள் தனித்துவமானவை. எனினும் நாம் செய்வதற்கு இன்னும் அதிகமுள்ளது. இருதரப்புக்குமிடையேயான வர்த்தகம் 8.27 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இந்தியாவிலிருந்து சுமார் 7.76 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதியாகி உள்ளன. 508 மில்லியன் டாலர் பொருட்கள் இறக்குமதியாகி உள்ளன," என்றார் பிபின் ராவத்.

