பிரிட்டனில் புதிய வகை கொரோனா கிருமி கண்டறியப்பட்டதை அடுத்து அந்நாட்டுக்கான விமானச் சேவையை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதிய வடிவம் எடுத்துள்ள கொரோனா கிருமி பிரிட்டனில் தற்போது வேகமாக பரவி வருவதாக கூறப்படும் நிலையில் அங்கிருந்து இந்தியா வரும் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
பிரிட்டனில் தற்போது நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
டிசம்பர் 31ஆம் தேதி வரை பிரிட்டிஷ் விமானங்களின் வருகையை நிறுத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றும், இன்று நள்ளிரவு 11.59 மணி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாகவும் விமானப் போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.
முன்னதாக பல்வேறு நாடுகள் பிரிட்டனுக்கான விமானச் சேவைகளை நிறுத்துவதாக அறிவித்ததை அடுத்து அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களை நிறுத்த வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் மத்திய அரசை வலியுறுத்தி இருந்தனர்.
பிரிட்டனில் மீண்டும் கிருமித்தொற்று அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் புதிய வகை கொரோனா கிருமி குறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.
இந்திய அரசு கிருமித்தொற்று விவகாரத்தில் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
முன்னதாக நாடு முழுவதும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த 260 மாவட்டங்களில் 20 ஆயிரம் பணியாளர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
வரும் ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை வாங்குவது, தயாரிப்பது, விநியோகிப்பது உள்ளிட்ட பணிகளை பல நாடுகள் துரித கதியில் மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் முதற்கட்டமாக 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஜனவரி மாதம் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் ராணுவ வீரர்கள், முன்களப் பணியாளர்கள், முதியோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேற்று முன்தினம் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
"கொரோனா விவகாரத்தைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு மோசமான காலகட்டம் முடிந்துவிட்டது.
"எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நீடிப்பது அவசியம். சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளை மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
"பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. எனினும் தடுப்பூசியின் செயல்திறன்தான் முக்கியம். இவ்விஷயத்தில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை," என்று ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

