பிரிட்டனில் இருந்து டெல்லி வந்த 11 பேருக்கு தொற்று உறுதி
மும்பை: பிரிட்டனில் புதிய வகை கொரோனா கிருமித்தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அங்கிருந்து மும்பை, டெல்லி வந்தடைந்த 795 விமானப் பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லி வந்த 11 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பிரிட்டனுக்கான விமானச் சேவையை நிறுத்தி வைத்துள்ளன. வரும் 31ஆம் தேதி வரை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு விமானங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆக கடைசியாக பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு இயக்கப்பட்ட விமானங்களில் வந்த அனைத்துப் பயணிகளும் தனிமைப்படுத்தப்பட்டனர். குறிப்பிட்ட அந்த இரு தினங்களில் மட்டும் 1,688 பேர் பிரிட்டனில் இருந்து வந்துள்ளனர். அவர்களில் 745 பேர் மும்பையில் உள்ள தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏழாவது நாளின் முடிவில் அவர்கள் அனைவருக்கும் கிருமித்தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனை செய்யப்படும் என்றும் அதில் தொற்று இருப்பது கண்டறிப்பட்டால் மருத்துவமனையில் அல்லது மீண்டும் விடுதிகளிலேயே 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தொற்று இல்லாதவர்கள் மேலும் ஏழு தினங்களுக்குத் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவர் என்றும் மகாராஷ்டிர சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த ஒரு மாத காலத்தில் பிரிட்டனிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு வந்திறங்கிய அனைவரையும் கண்காணிக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சு அறிவுறுத்தி உள்ளது.
இதற்கிடையே பிரிட்டனிலிருந்து டெல்லி வந்து சேர்ந்த பயணிகளில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 50 பேர் தனிமைப்படுத்தப் பட்டனர்.
நான்கு விமானங்களில் வந்த 950 பேர் டெல்லியில் தரை இறங்கியவுடன் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
எனினும், அவர்களைத் தொற்றியது புதுவகை கொரோனா கிருமியா என்பது தெரியவில்லை. அவர்களிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன.

