இந்தியாவின் கேரள மாநிலத்தில் மட்டுமே கொவிட்-19 நோய்த்தொற்று விகிதம் இன்னமும் உயர்ந்து வருவதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இம்மாதத் தொடக்கத்தில் அங்கு கிருமித்தொற்று விகிதம் சற்று மேம்பட்டு வந்தது. ஆனால், டிசம்பர் 13க்கும் 26ஆம் தேதிக்கும் இடைப்பட்ட கடந்த இரு வாரங்களில் தொற்று விகிதம் 10 விழுக்காட்டை எட்டியது. அதற்கு முந்தைய இரு வாரங்களில் இந்த விகிதம் 9.4 விழுக்காடாக பதிவாகி இருந்தது.
கிருமித்தொற்று விகிதம் என்பது, ஒவ்வொரு 100 பரிசோதனைகளில் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. இருவார காலகட்டத்தில் தொற்று விகிதம் 5 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருந்தால், அந்த மாநிலம் சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்படும்.
கேரளாவுடன் சேர்த்து, தொற்று விகிதம் 5 விழுக்காட்டிற்கு மேல் பதிவு செய்த மற்றொரு மாநிலம் கோவா. அங்கு தொற்று விகிதம் 6 விழுக்காடாக உள்ளது. எனினும், கோவாவில் நிலவரம் மேம்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முந்தைய இரு வாரங்களில் அங்கு தொற்று விகிதம் 6.4 விழுக்காடாக இருந்தது.
அகில இந்திய அளவிலும் தொற்று விகிதம் குறைந்து வருகிறது. நவம்பர் 30க்கும் இம்மாதம் 13ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் 3 விழுக்காடாக இருந்த அந்த விகிதம், கடந்த இரு வாரங்களில் 2.2 விழுக்காடாக குறைந்தது.
மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தொற்று விகிதம் 5 விழுக்காட்டிற்கும் குறைவாக பதிவாகியுள்ளது.
ஒன்றரை மாதத்திற்கு முன்னர், இந்தியாவின் ஒன்பது மாநிலங்களில் தொற்று விகிதம் 7 முதல் 15 விழுக்காடு வரை இருந்தது. தற்போது கேரளா, கோவா மாநிலங்களைத் தவிர்த்து, மற்ற மாநிலங்களில் கிருமித்தொற்று நிலவரம் கட்டுப்பாட்டிற்குள் வந்து உள்ளன.
உத்தரப் பிரதேசம், ஆந்திரா, அசாம், பீகார் ஆகிய மாநிலங்களில் தொற்று விகிதம் 1 விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ளது.