மத்திய அரசுகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இன்று 6வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இம்முறை 4 முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசுக்கும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வி கண்டன. இந்நிலையில் இன்று ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய அரசு ஆராய வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் நீடிக்கும் என்பதை சட்டபூர்வமாக உறுதி செய்யவேண்டும். வேளாண் கழிவுகள் எடுப்பது தொடர்பாக விவசாயிகளுக்கு அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை இன்றைய பேச்சுவார்த்தையில் விவசாயிகள் தீவிரமாக வலியுறுத்த உள்ளனர்.
புதிய வேளாண் சட்டங்களால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் லாபம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சாடியுள்ளார்.
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மத்தியில் பேசிய அவர், வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய மத்திய அமைச்சர்கள் தயாரா என சவால் விடுத்தார்.
இதற்கிடையே பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 25 விவசாயச் சங்கங்களின் தலைவர்கள் புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் டெல்லியில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை நேரில் சந்தித்து புதுச்சட்டங்களை ஆதரிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

