கர்நாடக உயர் நீதிமன்ற கருவூலத்தில் காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க, வைர நகைகள் உள்ளன. அவற்றுக்கு ஜெயலலிதாவின் உறவினர்கள் உரிமை கோருவார்களா எனும் கேள்வி எழுந்துள்ளது.
அவ்வாறு யாரும் உரிமை கோரி விண்ணப்பிக்கவில்லை எனில் அவை அனைத்தும் அரசுடைமையாக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிக்கியதை அடுத்து தனி நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரது வீட்டில் இருந்த ஏராளமான தங்க, வைர நகைகள், பட்டுச்சேலைகள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு பெங்களூருக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
பின்னர் கர்நாடக உயர் நீதிமன்ற கருவூலத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வைக்கப்பட்டுள்ளன.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் தண்டனைக்காலம் எதிர்வரும் பிப்ரவரி மாதம் முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில், ஜெயலலிதாவின் பொருட்களுக்கு அவரது உறவினர்கள் உரிமை கோருவார்களா எனும் கேள்வி எழுந்துள்ளது.

