அமராவதி: ஆந்திராவில் ராமர் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களை உடனடியாகக் கைது செய்யவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
விஜயநகர் பகுதியில் உள்ள 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ராமதீர்த்தக் கோவிலுக்குள் நுழைந்து சிலர் அங்கிருந்த ராமர் சிலையைச் சேதப்படுத்தி உள்ளனர். சிலையின் தலையைத் தனியே வெட்டி எடுத்துச் சென்று அருகில் உள்ள வயல்வெளியில் வீசிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ள பிரபல தெலுங்கு நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், நடப்பு ஆட்சியில் ஏற்கெனவே 2 கோவில்கள் சமூக விரோதிகளால் சூறையாடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"இது தொடர்பாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தர்வேதி லட்சுமி நரசிம்மர் கோவிலின் தேர், தீயிட்டு எரிக்கப்பட்டது. இதுவரை ஒருவரும் கைது செய்யப்பட வில்லை," என அவர் கூறியுள்ளார்.
கடந்த 19 மாதங்களில் இந்துக் கோவில்கள் மீது மட்டும் 120 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இத்தகைய தாக்குதல்களைக் கண்டிக்காமலும் குற்றவாளிகளைக் கைது செய்ய உத்தரவிடாமல் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வேடிக்கை பார்ப்பதும் கண்டனத்துக்குரியது என்று அவர் தெரிவித்துள்ளார்.

