புத்தாண்டு தினத்திற்கு முதல் நாளில் இந்தியா முழுவதும் இணையம் மூலம் ஒரே நாளில் 75 கோடி ரூபாய்க்கு உணவு விற்பனை நடந்துள்ளது. இதற்கு முன் நடந் திராத சாதனை விற்பனை இது என கூறப்படுகிறது. ஏராளமான 'ஆர்டர்'கள் வந்து குவிந்ததால் விநியோகிக்க முடியாத அளவுக்கு உணவுக்கும் விநியோகப் பணியாளர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டது.
புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு அதிகபட்சமாக ஸ்விகி இணைய விநியோக நிறுவனத்திற்கு நிமிடத்திற்கு 5,500 'ஆர்டர்'களும் மற்றொரு நிறுவனமான ஸோ மேட்டோவிற்கு 4,254 'ஆர்டர்'களும் குவிந்தன. ஒட்டுமொத்தமாக இரு நிறுவனங்களுக்கும் சராசரியாக நிமிடத்திற்கு 4,000 'ஆர்டர்'கள் வந்ததாகச் சொல்லப்படுகிறது.
குறிப்பாக, பெருநகரங்களைக் காட்டிலும் சிறு மற்றும் குறு நகரங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் 'ஆர்டர்' வந்ததாகவும் ஸ்விகியின் வட்டாரம் தெரிவித்துள்ளது. அதன் எதிரொலியாக பல உணவகங்களில் உணவு காலியாகிவிட்டதாகவும் அதனால் உணவு வகைகளை போதுமான அளவுக்கு விநியோகம் செய்யமுடியவில்லை எனவும் வருந்துகின்றனர் இந்த நிறுவனங்களின் முதலாளிகள்.
எனவே இனி வரும் காலங் களில் இதுபோன்ற பெரிய வர்த்தக நாட்களுக்கு முன்கூட்டியே தயாராக இருக்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
"புத்தாண்டுக் கொண்டாட்டம் தொடர்பான மொத்த வியாபாரம் மட்டும் 75 கோடி ரூபாய் அளவுக்கு நடந்துள்ளது. அனைத்து உணவகங்களிலும் ஆர்டருக்கான உணவுகள் தடையின்றி கிடைத்திருந்தால் 100 கோடி ரூபாயை அன்றைய நாளில் எட்டியிருப்போம்," என தெரி வித்துள்ளார் ஸோமேட்டோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தீபிந்தர் கோயல். உணவக உரிமையாளர்கள் தங்களது வர்த்தகத்திற்கு பக்கபலமாக இருந்ததாகவும் இந்நிறுவனங்கள் கூறின. அதே நேரம், உணவு விநியோகம் தொடர்பான புகாரும் குறைவாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

