மத்தியப் பிரதேசத்தில் கொரோனா சிகிச்சை மையங்களை மூடப்படுகின்றன
பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா கிருமித்தொற்றுப் பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. அங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் புதிதாக 810 பேருக்கு கிருமி தொற்றியுள்ளது. கொவிட்-19 நோயில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது.
தென் மாநிலங்களைப் பொறுத்தவரை தமிழகத்தில்தான் கொரோனா கிருமித்தொற்று தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் அங்கு புது நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக சரிந்து வருகிறது.
கேரளாவில் முன்பு குறைவாக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் நேற்று முன்தினம் கொவிட்-19 நோய்க்கு மேலும் எட்டு பேர் பலியாகி உள்ளனர்.
இதையடுத்து அங்கு பலியானோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 12,107ஆக உள்ளது. பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 921,938 என்றும் இதுவரை 898,919 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தற்போது 10,893 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த நாட்களை விட தற்போது கிருமிப் பரவல் குறைந்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே மத்தியப் பிரதேசத்தில் கொரோனா சிகிச்சை மையங்களை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து அரசு இம்முடிவுக்கு வந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
கிருமித்தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்த போது மத்தியப்பிரதேசம் முழுவதும் 225 சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் கூட சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டன.
இந்நிலையில் அம்மாநில அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை அடுத்து கிருமித்தொற்றுப் பரவல் தற்போது கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே தலைநகர் போபாலைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள சிகிச்சை மையங்கள் மூடப்படுகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் புதிதாக 16,505 பேருக்கு கிருமி தொற்றியுள்ளது.
கடந்த சில தினங்களாக புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவாகி வருகிறது.
மேலும், வாராந்திர பலி எண்ணிக்கையானது 30 வாரங்களுக்குப் பிறகு இரண்டாயிரத்துக்கும் குறைவாகப் பதிவாகி உள்ளது. கடந்த ஏழு நாட்களில் கிருமித்தொற்று சம்பந்தப்பட்ட உயிரிழப்புகள் 2,000க்கும் குறைவாக உள்ளதாக சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

