புதுடெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப் பெற இயலாது என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. எனவே வரும் 8ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் போராட்டம் நீடிக்கும் என விவசாயிகள் கூறியுள்ளனர். புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்றுகூடி டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போது கடுங்குளிர் நிலவி வருகிறது.
மேலும் கடந்த இரு தினங்களாக மழையும் பெய்தது. ஆனால் விவசாயிகள் சட்டை கூட அணியாமல் போராட்டக் களத்தில் உள்ளனர்.
பேச்சுவார்த்தை மூலம் தங்கள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காவிட்டால் புது வேளாண் சட்டங்களின் நகல்களை எரிக்கப் போவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்தப் போராட்டம் வரும் 13ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் போராட்டக் களத்தில் இருந்த மேலும் மூன்று விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதுவரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தினந்தோறும் டெல்லி நோக்கிச் செல்லும் நிலையில், ஹரியானாவில் விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகை குண்டு வீசப்பட்டது.
டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணியாகச் செல்ல முயன்ற போது ரிவாரி மாவட்ட போலிசார் தடுத்து நிறுத்தினர். அப்போது தடுப்பு வேலிகளைத் தள்ளிவிட்டு விவசாயிகள் முன்னேற முயன்ற போது போலிசார் அவர்களைக் கலைக்க கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர்.
இதற்கிடையே டெல்லி போராட்டக் களத்தில் உள்ள விவசாயிகளின் சோர்வை நீக்க அவ்வப்போது இசை, நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் தற்போது பெண்கள் பங்கேற்கும் கபடி போட்டி நடைபெற உள்ளது.

