உலகின் முதல் இரட்டை அடுக்கு சரக்கு ரயில் போக்குவரத்தை (படம்) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
அட்டலி-கிஷன்கர்க் வரையிலான மின்சாரத்தால் இயங்கும் இந்த 1.5 கிலோ மீட்டர் நீள இரட்டை அடுக்கு ரயில் மூலம் கூடுதலாக 25 டன் சரக்கைக் கொண்டு செல்ல முடியும். இது தற்போதைய இந்திய ரயில்வே போக்குவரத்துடன் ஒப்பிடுகையில், நான்கு மடங்கு எண்ணிக்கையில் கொல்கலன்களை ஏற்றிச் செல்லும் திறன் படைத்தது.
மேற்கு பிரத்தியேக சரக்குப் பாதையின் 306 கிலோ மீட்டர் தூர ரெவாரி- மதார் பிரிவையும் நேற்று மோடி தொடங்கி வைத்தார். இச்சேவைகளை நாட்டுக்கு அர்ப்பணித்த மோடி, இதனால் ராஜஸ்தான், ஹரியானா விவசாயிகளுக்குப் புதிய வாய்ப்புகள் பெருகும் என்றார்.
ரெவாரி மதார் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட ஒன்பது புதிய சரக்கு ரயில் நிலையங்கள் உள்ளன. இந்தப் பிரிவு திறக்கப்படுவதன் மூலம், ராஜஸ்தான், ஹரியானாவில் உள்ள தொழிற்சாலைகளுக்குப் பெரும் பயன் கிடைக்கும். கத்துவாசில் உள்ள கன்கார் சரக்குப் கொல்கலன் முனையத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ள வழி ஏற்பட்டுள்ளது. குஜராத் துறைமுகங்களுடனான இணைப்பை இது உறுதி செய்யும்.
இந்தப் பிரிவு தொடங்கப்படுவதன் மூலம், மேற்கு, கிழக்கு சரக்குப் பாதைகள் இடையே தடையற்ற இணைப்பு ஏற்படும். இந்நிகழ்ச்சியில், ராஜஸ்தான், ஹரியானா மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

