புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகள் நேற்று டிராக்டர் பேரணிக்கான ஒத்திகையில் ஈடுபட்டனர். இதில் 2,500 டிராக்டர்கள் பங்கேற்றன.
டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் எல்லைகளில் விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி நடந்தது.
இந்தப் பேரணியையொட்டி டெல்லி, ஹரியானாவில் போலிசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இருதரப்புக்கும் இடையிலான எட்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறி வருகிறது. இதை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள் ஓராண்டு ஆனாலும் தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை போராட்டம் நீடிக்கும் எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது வரும் 11ஆம் தேதி விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நிலவி வரும் கடுங்குளிர், மழைக்கு மத்தியில் விவசாயிகளின் போராட்டம் 40 நாள்களைக் கடந்துள்ளது. மோசமான வானிலை காரணமாக நேற்று முன்தினம் நடைபெற இருந்த டிராக்டர் பேரணி கைவிடப்பட்டது.
இந்நிலையில், டெல்லிக்கு அருகே உள்ள காசிப்பூர் பகுதியில் நேற்று டிராக்டர் பேரணிக்கான ஒத்திகை நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
இதற்கிடையே வேளாண் சீர்திருத்தங்களுக்குப் பின்னால் உள்ள உணர்வுகளை போராட்டக் களத்தில் உள்ள விவசாயிகள் உணர வேண்டும் என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க அரசு உறுதி பூண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"எனவேதான் வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் விவசாயிகளுடன் மட்டுமல்லாமல் எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடமும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை மூலம் நல்ல முடிவு எட்டப்படும் என மத்திய அரசு உறுதியாக நம்புகிறது," என்றார் அமைச்சர் தோமர்.

