ராய்ப்பூர்: இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் வழக்கத்திற்கு மாறாக மூன்று மனம் இணைந்த திருமணம் நடைபெற்றுள்ளது.
ஜகக்தால்பூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர் ஒருவர், ஒரே சமயத்தில் இரண்டு காதலிக்கும் தாலியை கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தன்னைக் காதலித்த ஹசினா, சுந்தரி ஆகிய இருவரையும் அவர்களுடைய சம்மதத்துடன் சந்து மெளரியா என்ற அந்த விவசாய இளைஞர் மணம் புரிந்தார்.
ஒரே மண்டபத்தில், ஒரே மேடையில், ஒரே மாதிரியான சடங்குகளுடன் ஜனவரி 3ஆம் தேதி இந்தத் திருமணம் நடைபெற்றது. இதில் அக்கம்பக்கத்தைச் சேர்ந்த சுமார் 600 பேர் கலந்துகொண்டனர்.
மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பஸ்தர் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமத்தைச் சேர்ந்த 21 வயது பழங்குடி பெண்ணான சுந்தரி காஷ்யாப்பிடம் சந்து மெளரியா மனதை பறிகொடுத்தார்.
இவர்களது காதல் தொலைபேசி வழியாக பேசிப் பேசியே பெருகி வளர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
இந்த நிலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஹசினா என்ற பெண்ணைச் சந்தித்த சந்து, மீண்டும் காதல்வயப்பட்டார்.
ஆனால், ஏற்கெனவே ஒரு பெண்ணைக் காதலித்து வருவதை ஹசினாவிடம் சந்து மனம் திறந்து ஒப்புக்கொண்டார். அதைப் பற்றி சற்றும் கவலைப்படாத ஹசினா, தன்னையும் திருமணம் செய்துகொள்ள ேவண்டும் என்று சந்துவிடம் வற்புறுத்தினார்.
இதற்கிடையே மூவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து நிலைமையை புரிந்துகொண்டனர்.
பின்னர் மூவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். ஒரு வருட காலம் மூவரும் ஒரே வீட்டில் வாழ்க்கையை ஓட்டிய நிலையில், ஊர் பெரியவர்கள் கேள்வி எழுப்பியதால் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க மூன்று வீட்டாரும் சம்மதித்தனர்.
மூவரின் பெயர்களும் அச்சிடப்பட்டு திருமண வரவேற்பு பத்திரிகை ஊர் முழுவதும் விநியோகிக்கப்பட்டது.
பின்னர் ஊரார் முன்னிலையில் மூவரின் திருமணம் நடைபெற்றது.
தன்னைக் காதலித்த இரு பெண்களுக்கும் துரோகம் ெசய்ய விரும்பவில்லை என்று இந்துஸ்தான் டைம்சுக்கு அளித்த பேட்டியில் சந்து தெரிவித்தார்.
அவரைத் திருமணம் செய்த இரு பெண்களும் கணவர் தங்களை சரிசமமாக நல்ல முறையில் கவனித்துக்கொள்வதாக கூறியுள்ளனர்.

